Sunday, 24 April 2011

கருங்காலியின் ஸ்பரிசத்தில் மரங்களின் ஒப்பாரி!




வெட்டிச் சாய்த்த மரங்கள் எத்தனையோ

விறகாய்ப் போனதும்...
வீட்டு உபயோகத்திற்காய் ஆனதும்
செல்லரித்துப் போனதையும் பற்றி
கவலைப்படதேயில்லை யாரும்

உன்னைமட்டும் சேர்த்துவைத்து
உயிர்கொடுத்த தச்சனெங்கே?

ஒழித்த மரங்களுக்கு ஒப்பாரி பாடஉன்னை
ஒட்டவைத்து விட்டானோ?

இழந்த மரங்களுக்கு இரங்கற்பா பாட உன்னை
இருக்கச் சொல்லிச் சென்றானோ?
இருப்பதைக் காத்திட இனி
உன்குரல் கொண்டு தடுப்பாயோ?

நானும்...
மரங்களை அல்ல -
மனிதர்களை அழித்துள்ளேன்...
என்நாடு காக்க எதிர் நாட்டு மக்களை
நூறா ஆயிரமாகணக்கில்லை

மரத்துண்டுகள் சேர்த்த தச்சன்
மனிதத் துண்டுகள் சேர்ப்பானா?

அனுப்பிவை... அங்கே ஆயிரக்கணக்கில் பிணங்களுண்டு!
ஒட்ட வைக்க குருதிப் பசை கூட உண்டு

அதிலும் ஓர் இசைக்கருவி செய்யட்டும்

சோக கீதம் பாட அல்ல
போர்ப்பறை முழங்க அல்ல

மனிதம் வளர்க்க! மீண்டும் மானுடம் தழைக்க!

-யாதுமானவள் 


(என் வேண்டுதலுக்கிணங்கி 15 நிமிடங்களில் இயற்றிய இந்த கவிதைக்கு நன்றி!)

1 comment: